தொழிலாளர்களுக்கான சமூக நலத்திட்டங்களை முடக்க வேண்டாம் என்று பெல்ஜிய அரசை பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதங்களாகப் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் ஓய்வூதியத்தில் சீர்திருத்தம் என்ற பெயரால் அதை எதிர்காலத்தில் ரத்து செய்யும் நோக்கத்துடன் அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோன்று, தொழிலாளர்களுக்கான பல்வேறு உரிமைகளையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனின் கட்டமைப்புக்குள் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்க இயலாதவை என்ற அரசின் சமாளிப்பை ஏற்க மாட்டோம் என்று கூறி, மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கைவிடும்படி பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
தங்களை இடதுசாரிக் கட்சிகளில் ஒன்று என்று சொல்லிக் கொள்ளும் சமூக ஜனநாயகக் கட்சியும் ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகக் கை தூக்கியுள்ளது. இது குறித்த உடன்பாடு ஒன்றில் ஆளும்கட்சியுடன் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி கையெழுத்திட்டுள்ள உடன்பாட்டின்படி, ஓய்வூதிய சீர்திருத்தங்களை அரசு முன்னெடுத்துச் செல்ல அனுமதி கிடைத்துள்ளது. அரசின் புதிய ஆலோசனைகளின்படி, ஒரு கவுரவமான ஓய்வூதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது உயர்த்தப்படவில்லை. மாறாக, 1,500 யூரோவாக அதை அதிகரிக்கலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் இது போதுமானதாக இருக்காது என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அதோடு, இந்தக் குறைவான உயர்வுக்குக்கூட பல்வேறு புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. 45 ஆண்டுகள் குறைந்தபட்சம் வேலை பார்த்திருந்தால்தான் இந்தக் குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும். மிகக்குறைந்த நபர்களுக்கு மட்டுமே இது கிடைக்க வாய்ப்புள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை தொழிலாளர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீது சுமத்தும் வலதுசாரி அரசுகளின் வேலையைத்தான் பெல்ஜிய அரசும் செய்கிறது. இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது. அதோடு, சட்டரீதியான ஓய்வூதியம், சமூக நலப் பாதுகாப்பை தொழிலாளர்களே நிர்வகிப்பது, மருத்துவத்துறையை வியாபாரமாக்காமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சோசலிசமே தீர்வு என்பதை முன்வைத்தும் மக்களைத் திரட்டப் போவதாக பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது.